புதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பை மீறி முதல்வர் நாராயணசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். கலைஞர் கருணாநிதி பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி, 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டார் நாராயணசாமி.
புதுவையில் பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதில் ஆளுநர் கிரண்பேடி பங்கேற்கவில்லை.
பட்ஜெட் கூட்டத் தொடரில் மரபுகளின் படி ஆளுநர் உரை இடம்பெற வேண்டும். ஆனால் ஆளுநரின் உரை இல்லாமலேயே பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மொத்தம் ரூ9 ஆயிரம் கோடிக்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
புதுவை பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்; 100 யூனிட் மின்சாரத்துடன் இலவச குடிநீர் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி (காலை டிபன்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். காலை டிபனாக இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும்.
கல்லூரிகளில் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து செய்யப்படும்.
ஸ்டாலின் மக்களை குழப்புகிறார்... மின் கணக்கீடு விவகாரம் குறித்து தங்கமணி அறிக்கை