6 நாள் தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: 6 நாட்களாக ராஜ்பவன் எதிரே நடத்திய போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நள்ளிரவில் தற்காலிகமாக கைவிட்டார்.
மக்கள் நலன் சார்ந்த, 39 கோரிக்கைகளுக்கு ஆளுநர், கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த 6 நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் தர்ணாவில் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் நாராயணசாமியை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆளுநரின் அழைப்பையடுத்து நேற்று அவருடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் நான்கரை மணி நேரம் கழித்து நிறைவடைந்தது. இதில் இலவச வேட்டி சேலை, இலவச அரிசி உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறுகையில் ஆளுநருடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார். அதன்படி ஆலோசனை நடத்தி நள்ளிரவில் தனது முடிவை அறிவித்தார்.
அப்போது, 6 நாட்கள் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக அவர் அறிவித்தார். மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரத்தை முன் வைக்க ஏக மனதாக முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.