வெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு புலம் பெயர்ந்தோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணம் மேற்கொள்கின்றனர். இது கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மீறிய செயலாகும்.
இத்தகைய செயலை தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பிடித்தம் ஏதுமின்றி ஊதியத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த பணியாளர்கள், மாணவர்கள் வசிக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வீட்டு வாடகை உடனே தர வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது.
இவ்வாறு பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வீட்டு வாடகை தர வலியுறுத்துவது அல்லது காலி செய்ய வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும் புதுச்சேரியில் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் போன்றவற்றை உடனே வழங்க வேண்டுமெனவும் முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.