ராத்திரி முழுக்க.. ராஜ்நிவாஸ் வாசல்களை அடைத்தாற் போல படுத்து தூங்கிய நாராயணசாமி, அமைச்சர்கள்
Recommended Video
புதுவை: புதுவை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ள நிலையில் புதுவை ராஜ் நிவாஸை சுற்றி தரையில் படுத்துக் கொண்ட முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம் செய்யப்பட்டதிலிருந்து முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் கிரண்பேடி அனுமதி தர வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு தருவதில்லை என்பதே முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டாகும்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஹெல்மெட் போடாத இரு சக்கர வாகனங்களை வழிமறித்த கிரண்பேடி அவர்களை எச்சரித்தார். சாலையில் நின்று கொண்டு போலீஸ் கான்ஸ்டபிள் போல் வாகனத்தில் போவோரை இழுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
படிப்படியாகத்தான்
அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை அனைத்தும் படிப்படியாகதான் நடக்கும். ஒரே நாளில் அனைத்து மாற்றமும் நடந்து விடாது. கிரண் பேடி தான் வகிக்கும் பதவிக்கேற்றாற் போல் நடந்து கொள்ளவில்லை என்று முதல்வர் மேலும் மேலும் புகார் கூறினார்.
தர்ணா போராட்டம்
கிரண் பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற முதல்வரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இரவு முழுவதும் ராஜ்பவனின் அனைத்து வாயில்களையும் அடைத்தாற் போல் முதல்வரும் அமைச்சர்களும் படுத்து உறங்கினர்.
3 அடுக்கு பாதுகாப்பு
பின்னர் இந்த போராட்டம் 2-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சென்னை, நெய்வேலியில் இருந்து அதிவிரைவு அதிரடிப்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கிரண் பேடி டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.