புதுச்சேரி: காங். எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா - எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் நாராயணசாமி அரசு!
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜான் குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் நாராயணசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா பதவியை அளித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், ஏனாம் தொகுதி எம்எல்ஏவான மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துக்கு அனுப்பி உள்ளார். இன்றைய தினம் எம்எல்ஏ ஜான் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் ஆந்திர மாநிலத்துக்கு அருகே உள்ள ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், புதுவை சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தாா்.
தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினா் யாரும் வரும் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தாா். மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தொடா்ந்து மோதல் போக்கும் நிலவி வந்தது. இந்த நிலையில் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சட்டசபைத் தலைவர் சிவக்கொழுந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இன்றைய தினம் காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் நமசிவாயம், எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஜான்குமாரும் பதவி விலகி உள்ளார். இதனையடுத்து ஆட்சி கட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.
சட்டசபையில் உள்ள 30 இடங்களில் திமுக காங்கிரஸ் கட்சியின் பலம் 19 ஆக இருந்தது. பாகூர் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்ததை அடுத்து ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சையின்(மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.