விளையாட்டுப் புள்ளீங்கோ.. சட்டசபைக்குள் செல்பி எடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் செல்பி எடுத்து விளையாடிக்கொண்டிருந்த படம் வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கும், காரைக்கால் மற்றும் பாகூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை பேரவையில் கொண்டுவந்து, தீர்மானம் குறித்து விளக்கமாக பேசிக்கொண்டிருந்த போது, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அனந்தராமன் செல்பி எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
புதுச்சேரி காவிரி டெல்டா.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. சட்டசபையில் தீர்மானம்!
மக்களுக்கான பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பொறுப்பே இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.