தொடரும் நாராயணசாமி தர்ணா.. ஆளுநர் மாளிகை அருகே தள்ளுமுள்ளு.. பதற்றம்... போலீசார் திணறல்
போலீஸாருடன் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
புதுச்சேரி: தர்ணா போராட்டம் பகுதிக்கு செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை நேற்றிலிருந்து புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி முன்னெடுத்து வருகிறார்.
ஆளுநர் மாளிகைக்கு அருகிலேயே, விடிய விடிய நடைபெற்று வரும் இந்த தர்ணா போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் தர்ணா போராட்டத்திற்கு புதுச்சேரி வணிகர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குவிந்தனர்
இந்நிலையில், தர்ணா போராட்டம் நடைபெறும் பகுதிக்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் திடுதிப்பென திரண்டு விட்டனர். காங்கிரஸ் மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சி தொண்டர்களும் ஆளுநர் மாளிகை முன்பு குவிந்துவிட்டனர்.
மறுத்துவிட்டனர்
அங்கு போலீசார் ஏற்கனவே யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்பு கட்டைகளை போட்டிருந்தனர். ஆனால் குவிந்த தொண்டடர்கள், அந்த தடுப்பு கட்டைகளை கீழே தள்ளி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் அப்போதும் தர்ணா பகுதிக்கு தங்களை செல்ல விட வேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டனர்.
தள்ளுமுள்ளு
இதனால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பார்த்ததும் தர்ணாவில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் நாராயணசாமி கட்சி தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பதற்றம்-பரபரப்பு
மற்றொரு பக்கம் எவ்வளவோ அரண்களை அமைத்து பார்த்தும், துணை ராணுவப்படை குவிக்கப்பட்டும் தொண்டர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் போலீசார் திணறி வருகிறார்கள். ஆளுநர் மாளிகை வளாகமும் பதற்றமும், பரபரப்பும் நிறைந்தே காணப்பட்டு வருகிறது.