வெளிநாட்டு கொரோனா கிளஸ்டர்.. புதுவையில் திடீரென அதிகரிக்கும் கேஸ்கள்.. உயரும் எண்ணிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர். மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய தந்தை, மகன் இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வில்லியனூர் பைபாஸ் சாலையை சேர்ந்த 36 வயது இளைஞருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
பகல் கொள்ளை.. 14 நாள் பரிதாபம்.. இதை பார்த்த பிறகும் பெங்களூர் போக ஆசைப்படுவீங்களா தமிழக மக்களே?
இதையடுத்து அவர்கள் 3 பேரும், கோவிட் மருத்துவமனையான கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாஹேவைச் சேர்ந்த அபுதாபியில் இருந்து வந்த நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மஹே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது அபுதாபியில் இருந்து வந்த லாஸ்பேட்டையைச் சேர்ந்த தந்தை, மகன் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் நபர் ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் 3 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி மாஹேவைச் சேர்ந்த அபுதாபியில் இருந்து வந்த நபர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே புதுச்சேரி கென்னடி கார்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கேரளா கண்ணூர் அரசு மருத்துவமனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காரைக்காலில் துபாயில் இருந்து வந்த இளம்பெண்ணும் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளார்.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை 12 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஆக மொத்தம் 17 பேர் புதுச்சேரி மாநிலத்தில் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.