புதுச்சேரியில் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 81.73 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் 76.68 சதவீத வாக்குகளும் பதிவாகின.
புதுச்சேரி மக்களவை தொகுயில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கமும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவ கல்லூரி அதிபரான கே.நாராயணசாமி உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக சார்பில் வெங்கடேசன், என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் புதுச்சேரி, காரைக்காலில் தலா இரண்டு மற்றும் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒன்று என மொத்தம் ஆறு வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 1100 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், ஊடகத்தினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனங்களும் எடுத்து செல்லக்கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் துறை விதித்துள்ளது.
இதனிடையே ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 5 வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகை சீட்டை எண்ணியப்பிறகுதான் முழு முடிவை அறிவிக்க வேண்டு என்பதால், ஒவ்வொரு தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அதன் முன்னிலையை மட்டும் உடனடியாக அறிவிப்பதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தலா 5 விவிபேட் இயந்திரம் வீதம் 150 விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டை எண்ணித்தான் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 25 மணி நேரத்திற்கு மேல் தான் அதிகாரப்பூர்வ முடிவு என்பது தெரியவரும்.
மேலும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின் போது வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.