சிறுமி பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத எஸ்பி மீது பாய்ந்தது வழக்கு
புதுச்சேரி: சிறுமி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத சிபிசிஐடி எஸ்பி மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் சிபிசிஐடி எஸ்.பியாக பணியாற்றுபவர் செல்வம். தற்போது காவல்துறை தலைமையக எஸ்.பியாகவும் கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார். இவர் பதவி உயர்வுக்கு முன்னதாக பெரியகடை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது சிறுமி ஒருவரின் பாலியல் வழக்கான போக்சோ வழக்கு ஒன்றை சரியான முறையில் விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் புதுச்சேரி நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிபதி செல்வம் எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி 409 பிரிவின் கீழ் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அதன்மீது எடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த இறுதி வடிவத்தை குற்றப்பத்திரிகையாக 90 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் எஸ்.பி செல்வம் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களை தப்பிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு எஸ்.பி செல்வம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. 409 பிரிவின்படி மோசடி செய்தல் போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைக்காவலுடன், அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஜாமீனில் உடனே விடுவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்பி செல்வம் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக உடல்நிலை சரியில்லை என்று கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவர் எப்போதும் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டலாம். எஸ்பி மீதே ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று புதுச்சேரியின் பல்வேறு காவல்நிலையங்களில் காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தாலும் எப்ஐஆர் கூட பதிவு செய்வதில்லை. காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளால் புதுச்சேரியில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது.