புதுவையை உலுக்கிய சிறுமிகள் பலாத்கார வழக்கு.. போலீஸார், புரோக்கர்கள் உள்பட 18 பேரும் விடுதலை
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 18 பேரை விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பெரியகடை காவல்நிலையத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் செய்யபட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றபட்டது.
போலீஸ் தொடர்பு
தீவிர விசாரணையில் சிறுமிளை அடைத்து பாலியல் தொழில் செய்வதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததும், போலீஸ் ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும், இதுமட்டுமல்லாமல் ஏராளமானோர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
போலீஸார் மீது வழக்கு
இதன்பேரில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் ஏட்டுகள் குமாரவேலு, பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 9 பேரும் மற்றும் புரோக்கர்களா புஷ்பா, ரகுமான், அருள்மரி உள்பட 18 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டிஸ்மிஸ்
இதையடுத்து 2015-ம் ஆண்டு காவல்துறையில் பணியாற்றிய 8 பேரையும் டிஸ்மிஸ் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது. குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
அனைவருக்கும் ஜாமீன்
பின்பு அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை புதுச்சேரி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆதாரம் இல்லை - விடுதலை
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி தனபால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். புதுச்சேரியில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.