ம்ம்ம்ம்ம்ம்மா.. சேற்றில் சிக்கி இறந்த பசு.. பிரிவை தாங்க முடியாமல் அருகிலேயே காத்திருக்கும் கன்று
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த தாய் பசு மாட்டை விட்டு, பிரிய மறுத்த கன்றுக் குட்டியின் பாசப் போராட்டம் பார்த்தவர்களை கண் கலங்க செய்தது.
புதுச்சேரியில் முக்கிய சுற்றுலாதளமாகவும், மாநிலத்தின் முக்கிய நீர் ஆதரமாகவும் விளங்கி வரும் ஊசுட்டேரி கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், நீர் வற்றி கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இதனால் ஊசுட்டேரியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக ஊசுட்டேரியில் விடப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் தனது கன்றுக் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் குட்டையில் நீர் குடிக்கும் போது சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது.
தனது தாய் இறந்தது கூட தெரியாத கன்றுக் குட்டி, தன்னுடைய தாய், குட்டையிலிருந்து எழுந்து வந்துவிடும் என்ற நம்பிக்கையில், இறந்த பசுமாட்டிற்கு அருகிலேயே கன்றுக் குட்டி சோகத்துடன் காத்திருக்கின்றது. தங்களுடைய பெற்றோர்களை கூட கவனிக்க நேரமில்லாத பிள்ளைகள் உள்ள இந்த காலத்தில், ஐந்து அறிவுள்ள இந்த ஜீவனின் பாசப்போராட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மேலும், ஏரியில் இறந்து கிடக்கும் பசுமாட்டை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊசுட்டேரி வனத்துறையினர், பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.