புதுச்சேரியில் அதிகார மோதல்?... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா
புதுச்சேரி: புதுச்சேரி மாநில டிஜிபி சுந்தரி நந்தா டெல்லிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் புதுச்சேரி மாநில காவல்துறையில் டிஜிபியாக சுந்தரி நந்தா பணியாற்றி வருகிறார். 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பெண் அதிகாரியான சுந்தரி நந்தா, புதுச்சேரி மாநிலத்தின் நியமிக்கப்பட்ட முதல் டி.ஜி.பி பெண் அதிகாரி ஆவார். டெல்லியில் பணியாற்றிய அவர், புதுச்சேரிக்கு கடந்தாண்டு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவர் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மிசோரம் மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றிய பாலாஜி ஸ்ரீவத்சவா புதுச்சேரிக்கு மாற்றபட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் இருந்து வருவதால், அரசு அதிகாரிகள் யாருடைய உத்தரவுகளை பின்பற்றி செயல்படுவதனெ உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், டிஜிபி சுந்தரி நந்தா தானாக டெல்லிக்கு இடமாறுதல் கேட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் 100 கோடி கொள்ளை நடைபெற்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, புதுச்சேரி டி.ஜி.பி. பதவியில் இருந்த சுனில்குமார் கெளதம் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக டெல்லி ஐ.பி.எஸ் அதிகாரி சுந்தரி நந்தாவை புதுச்சேரியின் புதிய டிஜிபியாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.