புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை தூக்கி வீசிய விவகாரம்.. விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்
புதுச்சேரி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை தூக்கி வீசிய விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அதிகாரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவி, மகனை அழைத்துக் கொண்டு புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் மட்டும் சென்னை திரும்பிச்சென்றார்.
அப்போது திடீரென்று கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையொட்டி அவரால் திரும்பி வந்து மனைவி-மகனை சென்னைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையொட்டி தனது மனைவி, மகளை அழைத்துச்செல்வதற்காக கோபாலன் கடை பகுதிக்கு காரில் வந்தார்.
அங்கு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவர்கள் சோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் வில்லியனூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலை எடுத்து வந்த சுகாதாரத் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அடக்கம் செய்ய வெட்டிய குழியில் அவரது உடலை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்.. பயணிகள் இன்றி வெறிச்சோடிய புதுச்சேரி!
இந்நிலையில் சவக்குழியில் உடலை அலட்சியமாக வீசிய விவகாரம் தொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.