"கூடா நட்பு, கேடாய் முடியும்.!" முதல்வருக்கே எச்சரிக்கை.. விடுத்தது புதுச்சேரி திமுக எம்எல்ஏ
புதுச்சேரி: திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் புதுச்சேரி முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
புதுச்சேரியில் இப்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆறு இடங்களில் வென்ற திமுக அங்குப் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இதனிடையே தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்பாகப் புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
1966லிருந்து கட்சிக்காக கொடி பிடிக்கிறேன்! ஆதங்கத்தை பகிர்ந்த திமுக சீனியர்! சமாதானம் செய்த அமைச்சர்
புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிடும் வரை திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடும்.. மின்துறை ஊழியர்களே பின்வாங்கினாலும் திமுக மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடும்.
காரைக்கால் வானொலி
காரைக்கால் பண்பலை வானொலி நிலையத்தில் 4 மணி நேரம் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள். நாட்டிலேயே லாபத்தில் இயங்கக்கூடிய ஒரே வானொலி நிலையம் காரைக்கால் பண்பலை மட்டுமே. காரைக்கால் பண்பலை தமிழ் நேயர்களுக்காக ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் தினசரி சுமார் 4 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக ஹிந்தி நிகழ்ச்சி ஒளிபரப்பினால் அதனால் மிகப் பெரிய அளவு வருவாய் இழப்பு நேரிடும்.
வருவாய் இழப்பு
வருவாய் இழப்பைப் பற்றிக் கூட கவலைப்படாத ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்படுகிறது. இதைத் திட்டவட்டமாகக் கண்டிக்கிறோம். திமுகவின் எதிர்ப்பை தொடர்ந்து இந்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்தி திணிப்பை நாங்கள் ஒரு நாளும் ஏற்க மாட்டோம்.
பாடநூல்
புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறி இருக்கிறார். இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக இதனைக் கடுமையாக எதிர்க்கும்.. தொடக்கம் முதலே தமிழக பாடநூல் திட்டத்தைத் தான் புதுச்சேரியில் பின்பற்றப்படுகிறது. புதுச்சேரி மாணவர்களுக்குப் புதுச்சேரி மாநில வரலாற்றை இடம் பெற வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டோம்.
சிந்தித்து முடிவு
தமிழக முதல்வரும் இதனை ஏற்றுக்கொண்டார். தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் ஒப்புதல்படி தமிழக பாடநூல் வாரிய குழுவுடன் புதுச்சேரி மாநில அதிகாரிகள் இணைந்து பேசி புதுச்சேரி வரலாற்றைத் தமிழக பாடத்திட்டத்தில் கொண்டு வர உள்ளனர். இந்தச் சூழலில் இது போன்ற அறிவிப்பு மக்களிடையே போராட்டத்தை ஏற்படுத்தும். புதுச்சேரி முதல்வர் இவ்விஷயத்தில் சிந்தித்து முடிவெடுப்பார் என நம்புகிறேன்.
தொடர் போராட்டம்
பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் புதுச்சேரி மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் இருக்கும் அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரும்பட்சத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடும்..
கூடா நட்பு
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் புதுச்சேரியின் அடுத்த தலைமுறை கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. கூடா நட்பு, கேடாய் முடியும்" என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் புதுச்சேரி முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார்.