புதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக இன்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்களை காரணம்காட்டி கூட்டணியில் இருந்து கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளது.
புதுவை திமுக இன்று ஆலோசனை
இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தவும் திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.
ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்ப்பாளர்
ஜெக்த்ரட்சகன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் மிகப் பெரிய அளவில் மாஸ் காண்பிக்கும் நடவடிக்கைகளில் திமுகவினர் தீவிரமாகவும் உள்ளனர். ஜெகத்ரட்சகனை வரவேற்கும் வகையிலான போஸ்டர்களில் மண்ணின் மைந்தரே வருக! மக்களாட்சி தருக! என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சோனியாவிடம் புகார்
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியினர் திமுகவினரின் இந்த முடிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் புகாராகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட்டணி, புதுவையில் எதிரணி என்கிற பார்முலாவை எப்படி ஏற்க முடியும்? என சோனியாவிடம் ராகுல் காந்தி தரப்பில் கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளதாம்.
திமுக முடிவால் பாஜக மகிழ்ச்சி
அதேநேரத்தில் காங்கிரஸை ஓரம்கட்டும் திமுகவின் இந்த மூவ்களை பாஜக மவுனமாக ரசித்து கொண்டிருக்கிறதாம். காங்கிரஸை யார் கூட்டணியில் இருந்து கழற்றி ஒதுக்கி வைத்தாலும் தங்களது நேச சக்தியாகவே பார்ப்பது என்பது பாஜகவின் வியூகம். தமிழகத்தில் பரம எதிரியான திமுக, புதுச்சேரியில் இப்போது வெளிப்படையாக அறிவிக்க முடியாத நட்பு சக்தியாகவும் உருமாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.