புதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. லோக்கல் பஸ் ஓடும்.. முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநிலத்திலும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பேருந்து சேவைக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரியிலும் வரும் 31 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்துள்ளோம். கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். தொழிற்சாலைகளும் அதே நேரம் செயல்படும்.
மாநிலத்துக்குள் செயல்படும் உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் 3 பேர் செல்லலாம். புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் டாக்சிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களின் நேரமும் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு பார்சல் வாங்கிச் செல்லமட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிவப்பாவது, பச்சையாவது.. அனைத்து நகரங்களிலும் ஆரம்பித்த அமேசான், பிளிப்கார்ட் சப்ளை.. எல்லாமே உண்டு
திருமணங்களுக்கு 50 பேர்
திருமண விழாக்களில் 50 பேர் கலந்து கொண்டு நடத்தலாம். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்குபெற வேண்டும். வாகனங்கள் புதுச்சேரிக்குள் தாராளமாக செல்லலாம். புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லவும், காரைக்காலில் இருந்து புதுச்சேரி வரவும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. அதுதொடர்பாக தமிழக அரசுடன் பேசி, வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கலாம். மதுக்கடைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
கண்காணிக்க உத்தரவு
முதல் இரண்டு நாட்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை நெறிமுறைப்படுத்த காவல்துறை, வருவாய்த்துறை, கலால்துறையைச் சேர்ந்தவர்கள் கண்காணிக்க வேண்டும். புதுச்சேரியில் கடைகள் அருகருகே இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் மதுக்கடைகள், பெட்ரோல், டீசலுக்கு கோவிட் வரி போடுவது சம்மந்தமாக அமைச்சரவையில் பேசி முடிவை அறிவிப்போம். பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடியை திறக்க முடிவு செய்துள்ளோம். இப்படி சகஜ வாழ்க்கை மாநிலத்தில் வரவேண்டும். மக்கள் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகளை கொடுத்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை தடுத்து நிறுத்த மிகப்பெரிய அளவில் கண்காணிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
வெளியே வராதீங்க
வரும் 31 ஆம் தேதி வரை மாநில மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசு மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைகின்ற ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. மின்சாரமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது பட்டியலில் உள்ளது. அந்த மின்சார்ததை மத்திய அரசு தன் கையில் எடுத்து கொண்டு மின்துறை மூலம் நடக்கின்ற நடவடிக்கைகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
இலவச மின்சாரம்
நாம் நம்முடைய மாநில விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறோம். ஏழை மக்களுக்கு 100 யூனிட் இலவசமாக கொடுக்கிறோம். நாம் தொழிற்சாலைகளை ஈர்க்க மின்சாரத்தில் சில சலுகைகளை கொடுக்கிறோம். இதையெல்லாம் செய்வதால்தான் நம்முடைய மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் வருகின்றன. விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தனியாரிடம் ஒப்படைத்தால் இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
பிரதமர் மோடிக்குக் கடிதம்
எனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை இவை எல்லாம் எங்களுடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
நாங்கள் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிலையை மாநில அரசின் கையில் வைத்துள்ளோம். இதனை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்று கடிதம் எழுதியுள்ளேன்.
பிரதமரிடமிருந்து பதில் வரலை
இதுசம்பந்தமாக மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன். இதுவரை பிரதமரிடமிருந்து பதிலும் வரவில்லை. பல மாநில முதல்வர்கள் மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். இப்போது மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்கின்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. விண்வெளி, அணுசக்தி, பொதுத்துறையை தனியாரிடம் ஒப்படைப்பது என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எல்லாம் மக்களால் எதிர்க்கக் கூடாது திட்டங்களாக உள்ளன. பாஜகவை சேர்ந்த தொழிற்சங்கங்களே இதனை எல்லாம் எதிர்க்கின்றது. இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டுமென நாராயணசாமி தெரிவித்தார்.