புதுவையில் மருத்துவர் ஆலோசனையை கேட்காத இளைஞர்.. 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவும் அபாயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவர்களின் ஆலோசனையை கேட்காமல் பணிக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்தோர், தொழிலாளர்கள், பேருந்தில் பயணம் செய்தோர் என நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தும் பணி மும்முரமாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இவர் புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு எப்படி நோய் தொற்று உருவானது என தெரியவில்லை. இதனிடையே அவரைப்பற்றி சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 7 ம் தேதி அவர் அரசின்பாண்லே பால் பூத், சூப்பர் மார்க்கெட், ரெட்டியார்பாளையத்திலுள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று டிவி வாங்கியது, கனகன் ஏரி அருகே இறைச்சி கடையில் கோழிக்கறி வாங்கியது. நிறுவன பேருந்து மூலம் பணிக்கு சென்று திரும்பியது தெரியவந்தது.
மேலும் கடந்த 11 ஆம் தேதி திங்கட்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அந்த இளைஞர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா பரிசோதனைக்காக அவரின் உமிழ்நீரை சேகரித்த மருத்துவர்கள், சோதனை முடிவுகள் வரும் வரை வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை கேட்காமால், அந்த இளைஞர் உடனடியாக பணிக்கு சென்றுள்ளார். இதையடுத்து வந்த கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சென்ற இடங்களில் இருந்தோர், அவரது குடும்பத்தினர், அவருடன் பணியில் இருந்த சக ஊழியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர், செவிலியர் மற்றும் தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
Recommended Video
இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவன பேருந்தை தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என்று கல்மண்டபம் பகுதியில் மறியலும் நடைபெற்றது. மேலும் அவர் பணியாற்றி வந்த தொழிற்சாலைக்கு சென்ற போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து தொழிற்சாலையும் மூடப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், இனிமேல் புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவிதத்திலும் கொரோனா தொற்று வரலாம். அனைவரையும் பரிசோதிக்க முடியாது, மக்கள் முகக்கவசம், கையுறை அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி மூலம் கைகளை கழுவி கொள்வது ஆகியவைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதுபோல் தங்களது செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென தெரிவித்தார்.