புதுச்சேரி.. கிரண்பேடிக்கு எதிராக திரண்ட மீனவர்கள்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50 ஆயிரம் நபர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இதனிடையே மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்னர் கடந்த 1 ஆம் தேதி முதல் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் வம்பாகீரபாளையம் பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
ராத்திரி நேரம்.. பஸ் ஸ்டாண்ட்டில் 2 திருநங்கைகள்.. சிக்கி திணறிய தொழிலதிபர்.. தூக்கிய போலீஸ்!
அப்போது போலீசார் பாரதி பூங்கா அருகே தடுப்புகளை அமைத்து முற்றுகையிட வந்தவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் ஊர்வலம் வந்தவர்கள் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகவும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு தடைகளை தாண்ட முற்பட்டபோது, மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தார்கள். இதனால் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஒரு வார காலத்திற்குள் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், பென்ஷன் வாங்கும் மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணத்தை ரத்து செய்யக்கூடாது என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.