புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 1 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் தேர்தல் சமயத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, கடந்த மே உச்சமடைந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் பக்தர்களுக்கு தடை
தமிழ்நாட்டில் எவ்வித தளர்வுகளும் இல்லாமல் கொரோனா ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் அங்கு ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை திரையரங்குகள் இயங்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் தலங்கள் 50 சதவீத பேருடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மதுபானக் கடைகளுடன் இயங்கும் பார்கள் 50 சதவிகித பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.