12ம் தேதி மறு வாக்குப் பதிவு.. நோ சரக்கு.. பாட்டில் வாங்கி ஸ்டாக் வைக்கும் புதுச்சேரி "குடிமக்கள்"!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யவும், பொதுமக்கள் ஒன்றாக கூடவும் தேர்தல் துறை தடை விதித்துள்ளது.
மேலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு புதுச்சேரி முழுவதுமுள்ள மதுபானக்கடைகளை மூடவும் தேர்தல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. இதில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில், விவிபாட் எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான ஒப்புகை சீட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுக்காமல் வாக்குப்பதிவை நடத்தியதால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் தேர்தல் துறையிடம் வலியுறுத்தின.
பாஜகவில் சேரவில்லை.. ஆனால் கேரள ஆளுநராகிறார்? ஓ.பி.எஸ் குறித்து கேரளாவில் பரபரக்கும் செய்தி!
12ம் தேதி மறு வாக்குப் பதிவு
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட தேர்தல் துறை அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் வரும் 12 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்தவுள்ளது. இதனிடையே மறு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தேர்தல் துறை தடை விதித்துள்ளது.
கூட்டமாக கூட தடை
மேலும் 10 ம் தேதி மாலை 6 மணி முதல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோ சரக்கு கடை
மேலும் 10 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை மூன்று நாட்களுக்கு புதுச்சேரி முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 நாட்கள் மூடல்
கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நேரத்தில் மூன்று நாட்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெறுவதால் மீண்டும் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் புதுச்சேரியில் உள்ள மது பிரியர்களும், வார இறுதி நாட்களில் பல்வேறு வகையான மது வகைகளை சுவைத்து பார்க்க புதுச்சேரி வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் கலக்கமடைந்துள்ளனர். மேலும் ஒருசிலர் மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்களை தற்போதே வாங்கி வைத்துவிட்டனர்.