எதுக்கு இந்த சால்வை.. எதுக்கு இந்த பேனர்.. இந்தா பிடிங்க காசு.. குணமாக அட்வைஸ் செய்த கிரண் பேடி!
புதுச்சேரி அதிகாரிகளுக்கு கிரண்பேடி அட்வைஸ் செய்கிறார்.
புதுச்சேரி: கிரண்பேடி என்றாலே அதிரடிதான்! இவரிடம் அட்வைஸ் கூட அதிரடியாகத்தான் வெளிப்படும் போல!!
புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதும், மாநில முதல்வர் நாராயணசாமியுடன் பல்வேறு நிர்வாக விவகாரங்களில் மல்லுக்கட்டினார். பொழுது விடிந்து பொழுது போனாலே கிரண்பேடி தொடர்பான சர்ச்சை இல்லாமல் புதுச்சேரி விடியாது என்ற அளவுக்கு செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் மகளிர்தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசும்போது, "வீட்டில் கணவன்மார்கள் பெண்களை அடித்து துன்புறுத்தினால், அடங்கி போகக்கூடாது. கொஞ்சமாவது எதிர்ப்பு காட்ட வேண்டும். அவர்களை திருப்பி தாக்க வேண்டும்" என்று கொளுத்தி போட்டு விட்டு போனார்.
சம்பிரதாயங்கள்
அதேபோல, அதிகாரிகள் அரசின் நிதிகளை செலவிடும்போது அதை தங்கள் பணமாக நினைத்துச் செலவு செய்யவேண்டும் என்று நிறைய முறை அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனாலும் ஆளுநர் என்ற பதவிக்கு அதிகாரிகள் சில சம்பிரதாயங்களை செய்ய தவறுவதில்லை. அப்படித்தான் ஒரு விழாவில் கலந்துகொள்ள கிரண்பேடி வருகிறார்.
வரவேற்பு பேனர்
அப்போது நுழைவு வாயிலில், இவரை வரவேற்று ஒரு பேனர் கட்டி வைத்திருந்தார்கள். ஒரே ஒரு பேனர்தான் ஒரு மூலையில் கட்டப்பட்டிருந்தது. வேறு பந்தல், அலங்கார வளைவுகள், கட் அவுட்கள், இதெல்லாம் அங்கு ஒன்றுமே இல்லை. இந்த ஒத்தை பேனரை பார்த்துவிட்டார் கிரண். அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அழைத்தார்.
கழட்டி எடுத்தார்
"இதெல்லாம் என்ன?" என்றார். அதற்கு அந்த நபர், "உங்களை வரவேற்பதற்காகத்தான் மேடம்" என்கிறார். "எதற்கு பணத்தை இப்படி செலவழிக்கிறீங்க?" என்று சிரித்து கொண்டே கேட்ட கிரண்பேடி, அந்த பேனரை அவரே சென்று கழட்டி எடுத்து விடுகிறார். இதனை பார்த்த அங்கிருந்தவர்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எதுக்கு வீண் செலவு?
பிறகு, "யார் இதற்கு செலவு செய்தது? எவ்வளவு பணம் செலவு செய்தீங்க?" என்று கேட்கிறார். அதற்கு அந்த நபரும், "நான்தான் மேடம் ஏற்பாடு பண்ணேன்.. 500 ரூபாய் ஆச்சு" என்றார். உடனே பக்கத்திலிருந்த போலீசாரிடம் 500 ரூபாயை வாங்கி, அந்த நபரிடமே கொடுத்து, இனி இப்படி செய்ய வேண்டாம் என்று உள்ளே போகிறார்.
750 ரூபாய்
அங்கு நுழைந்தும் சும்மா இல்லை கிரண்பேடி. அவருக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிக்கிறார்கள். உடனே அதை பார்த்ததும், "இதை யார் வாங்க சொன்னது? இதுக்கு எவ்ளோ செலவு பண்ணீங்க?" என்றதும் திரும்பவும் அந்த அறையில் சிரிப்பு சத்தம்தான். அந்த நபரும், "நான்தான் வாங்கினேன்.. 750 ரூபாய்" என்றதும், அவருக்கு அந்த பணத்தை உடனே தருமாறு கிரண் சொல்கிறார்.
கலகல அட்வைஸ்
அதன்படியே சால்வைக்கான பணம் 750 ரூபாய் அவரிடமே தரப்பட்டது. கிரண்பேடி சிடுசிடுவென முகத்தை வைத்து கொண்டு சொல்லாமல், தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க கூடாது என்று கலகலத்தவாறே அதிகாரிகளுக்கு குணமாக அட்வைஸ் சொன்ன இந்த வீடியோதான் தற்போது வைரலாகிறது.