ஊழல் குற்றச்சாட்டு... ஆளுநரின் புகாரால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஊழல் குற்றச்சாட்டால், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர்களின் அலுவலக தேவைக்கான ஸ்டேஷனரி பொருட்கள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை துறை சார்ந்த அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் பிப்டிக் நிறுவனத்திலிருந்து 3 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் பொருட்களை வாங்கியுள்ளதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜீலை வரை நான்கு மாதங்களுக்கு 15 ஆயிரத்து 980 ரூபாய் தேனீருக்காக செலவு செய்துள்ளதாக பாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்களின் அலுவலகத்துக்கு அமைச்சரவை அலுவலகமே பொருட்களை வழங்கி வரும் நிலையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலவினங்கள் ஏற்படுகிறது. நீண்டகாலமாக அமைச்சர்களின் இதுபோன்ற நடவடிக்கையால்தான் அனைத்து அரசு நிறுவனங்களும், ஊழியர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு நஷ்டத்தில் இயங்கி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிரண்பேடியின் இத்தகைய நடவடிக்கையால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.