தினமும் இப்படி பொய் சொல்றதே உங்களுக்கு வழக்கமாக போச்சு.. நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தினந்தோறும் பொய்களை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்று புதுச்சேரி - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி பதிலடி கொடுத்துள்ளார்.
இலங்கையின் ஜாப்னா துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி புதுச்சேரி தலைமை செயலகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில துறைமுகத்துறை அமைச்சர் கந்தசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்பிக்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் மற்றும் இந்திய இலங்கை துறைமுகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இலங்கையின் ஜாப்னா துறைமுக்திலிருந்து புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, இலங்கை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அவரது செயல்பாடு காரணமாக மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என கிரண்பேடி மீது கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனிடையே முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்க பயணிகளிடம் குடியேற்ற சோதனை நடத்தப்பட வேண்டும், உளவுப்பிரிவு, கடத்தல் தடுப்பு பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இது தெரியாமல் இங்கு சிலர் நாள்தோறும் பொய்களை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர் என முதல்வர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.