தமிழர்கள் கோழைகளா.. சுயநலவாதிகளா.. நான் சொல்லலீங்க.. பல்டி அடித்த கிரண் பேடி
Recommended Video
புதுச்சேரி: சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து தான் கூறிய கருத்து தன்னுடைய கருத்துல்ல என்றும் அது மக்களுடைய கருத்து என்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கமளித்துள்ளார்.
சென்னை வறட்சியில் சிக்கி தவிர்ப்பதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழக அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி நேற்று சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.
மேலும் தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் எனவும் கிரண்பேடி தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக எதிர்ப்பு
கிரண்பேடியின் இந்த கருத்து அரசியல் கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசியதோடு மட்டுமின்றி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார். மேலும் குடியரசுத் தலைவர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிரண்பேடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியிலும் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் மாளிகை அருகே நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் தான் கூறிய கருத்து குறித்து சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ள கிரண்பேடி, தன்னை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். நேற்று நான் பதிவிட்டிருந்தது, இது ஒரு கேள்வி மற்றும் பதிலின் வடிவத்தில் வந்த ‘மக்கள் பார்வை' என்று நான் கூறினேன்.
சென்னை தண்ணீர் பஞ்சம்
மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய இது உதவுகிறது. நான் மக்களின் கருத்தை பகிர்ந்துள்ளேன். இது எனது தனிப்பட்ட பார்வை அல்ல. இது மக்களின் பார்வை. எனவே இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதோடு அவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவது இன்று உலகம் முழுவதும் தெரியும். அதனால்தான் பிரதமர் மோடிம் நீர் பிரச்சினைகளுக்காக மழை நீரை சேமிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நீர் நிலைகளை தத்துதெடுக்கணும்
மக்களின் துன்பத்தை அகற்ற சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த பருவமழையிலாவது நாம் அனைவரும் நீர்நிலைகளை தத்தெடுத்து மழை நீரை சேமிக்க உதவ வேண்டும். அதற்காக நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அரசியல் தலைமை, அதிகாரிகள் மற்றும் மக்கள் தாங்களே முன்வந்து மழை நீரை சேமித்து, நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் துன்பம் பொதுவானது என கிரண்பேடி விளக்கமளித்துள்ளார்.