இது சூப்பர்ல.. ஒரு சீட்டுல ஒருத்தர் மட்டும்தான்.. ப்ரீயா உட்காருங்க.. கொரோனா அலர்ட்!
புதுச்சேரி: கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரிக்குள் இயக்கப்பட்டு வரும் உள்ளூர் பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒரு பயணி மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாநில வாகனங்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில எல்லைகளான, கிழக்கு கடற்கரை சாலை, கன்னியகோவில், மதகடிப்பட்டு, கோரிமேடு ஆகிய எல்லைகள் சீல வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் புதுச்சேரியில் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, உள்ளே வர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டன.
உள்ளூர் வாகனங்கள் மட்டும் உரிய சோதனைக்கு பின்பும், கிருமி நாசினி தெளித்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். எல்லைகளில் ஏராளமான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கான பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு சில உள்ளூர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றது. தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒரு பயணி மட்டுமே உட்கார்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பேருந்து புறப்படுவதற்கு முன்பு, பேருந்துகளில் ஏறும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போலீசார் பயணிகளிடம் முக கவசம் அணியுமாறு வலியுறுத்துகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க அதிரடி.. தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்
இதனிடையே கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரியில் உள்ள அரசு பல் மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள் இரண்டும் கோரானாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்காக 10 படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் 10 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்தார்.