புதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை.. ரூ.1 லட்சம் வரை அபராதம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பைகள், குவளைகள், தட்டுகள் உள்பட 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தன.
இந்த கோரிக்கையை ஏற்று புதுச்சேரி மாநிலத்திலும் இன்று முதல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி பாலித்தீன் தூக்குப் பைகள் (கேரி பேக்குகள்), பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும்தாள், உணவு அருந்தும் மேஜையின் மேல் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள் (தண்ணீர் பாக்கெட்டுகள்), பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்டிரா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட 10 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது, சேகரித்து வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
இதனிடையே பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மூடுவதற்கு பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்பு, தானியங்கள், மருந்துகள் மற்றும் பால் ஆகியவைகளை விற்பனை செய்ய பயன்படும் பைகள் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.