புதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. !
புதுச்சேரி: புதுச்சேரியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு உஷாராக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு இல்லாததால், உடனே உருவாக்குமாறு டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டார். இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் 18 காவலர்கள் அடங்கிய, தீவிரவாத தடுப்பு பிரிவு புதுச்சேரியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உருவாகும் இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி செயல்படும். உள்ளூரில் இயங்கும் அமைப்புகளை கண்காணிப்பது, அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தகவல்களை பெற்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவது இதன் பணியாக இருக்கும்.