புதுச்சேரி ஜிப்மரில் போலி இருப்பிட சான்றிதழ் விவகாரம் பூதாகரம்... எம்பிபிஎஸ் மாணவர்கள் கலக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் அம்மாநிலத்தவருக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநில மாணவர்கள் போலி சான்றிதழ்களை அளித்து சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் போலி ஆவணங்கள் கொடுத்து சேர்ந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
ஜிப்மரில் சேருவதற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஜிப்மரில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான பட்டியலை கடந்த வாரம் ஜிப்மர் வெளியிட்டது.
தனி ஒருவன் நினைத்து விட்டால்.. 100 ஏக்கர் பரப்பளவில் ஓங்கி உயர்ந்த காடு.. சபாஷ் சரவணன்!
போலீசில் புகார்
இதில் புதுச்சேரியில் வசிக்காத மற்றும் படிக்காத பலர் போலியான இருப்பிட சான்று பெற்று புதுச்சேரி இடத்துக்கான தேர்வு பட்டியலில் இடம் பிடித்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்க தொடங்கின. அவற்றை ஆய்வு செய்ய ஜிப்மருக்கு வலியுறுத்தப்பட்டன. ஆனால் ஜிப்மர் நிர்வாகம் அமைதி காத்தது. அதைத் தொடர்ந்து கோரிமேடு காவல்நிலையத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜிப்மர் மீது புகார் தரப்பட்டது.
மாணவர்கள் இருப்பிடம்
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாணவர்களுக்கான கலந்தாய்வில் ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதனால் புதுச்சேரி இடத்தில் விண்ணப்பித்த வெளிமாநிலங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இறுதியாக 54 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது போலி சான்றிதழ்கள் கொடுத்து ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ள விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
ஜிப்ரில் நடவடிக்கையில்லை
இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல்வாழ்வு சங்க தலைவர் பாலா கூறுகையில், "புதுச்சேரி அரசின் பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமாரின் மகள் கிருத்திகா புதுச்சேரி பிரிவில் ஜிப்மர் முதலாமாண்டில் சேர்ந்துள்ளார். இவர் போலி ஆவணம் மூலம் புதுச்சேரி குடியுரிமை சான்று பெற்றுள்ளார். வருவாய்த்துறை இதை முறையாக ஆய்வு செய்யவில்லை. இம்மாணவி காஞ்சிபுரத்தில் குடியிருப்பதாக குறிப்பிட்டு தமிழகத்தை இருப்பிடமாக கொண்டு நீட் தேர்வை குன்றத்தூரில் எழுதியுள்ளார்.
இரட்டை குடியுரிமை
ஒரே மாணவிக்கு இரட்டை குடியுரிமை தவறு. குற்றச்செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை தேவை. ஏற்கெனவே இதுபோன்ற தவறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காத ஜிப்மர் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. ஜிப்மர் நிர்வாக தவறான செயல்பாட்டால் இது போன்ற தவறுகள் பல ஆண்டுகளாக தொடர்கிறது. சிபிஐக்கும் புகார் அனுப்பியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
மாணவர்கள் கலக்கம்
இதேபோல் கேரளத்தை சேர்ந்த மாணவர் புதுச்சேரி முகவரியை கொண்டும், அரபு நாட்டில் படித்த மற்றொரு மாணவர் ஜிப்மரில் இடம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது போலி சான்றிதழ்கள் கொடுத்து ஜிப்மரில் சேர்ந்த மாணவர்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதால், போலி சான்றிதழ் பெற்றவர்கள், சான்றிதழ் அளித்தவர்கள். போலி சான்றிதழை ஏற்றவர்கள் என பலருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.