சிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் அதிரடி தீர்மானம்.. கிரண் பேடி எதிர்ப்பையும் மீறி!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று கூடிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்து சட்டப்பேரவை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட்ட மாநிலங்களின் வரிசையில் புதுவையும் இணைந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை திருக்குறள் வாசித்து சபாநாயகர் சிவகொழுந்து தொடங்கி வைத்தார். முதலாவதாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புருசோத்தமன் மற்றும் ராமநாதன் ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அந்த வேதனை இருக்கே அந்த வேதனை.. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் தமிழக காங்.!
சிஏஏ சட்டம்
இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகள் திரும்பப்பெற வேண்டும். காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்த வேண்டும். 70 வது இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாட்டம் ஆகிய 4 தீர்மானங்களை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்தார்.
நாராயணசாமி தீர்மானம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்த போது, பேரவையில் எழுந்து நின்ற பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி உள்ளிட்ட மூவரும் தீர்மானத்தை முன்மொழிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், புதுச்சேரியில் யாருக்கும் பாதிப்பில்லாத, பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து ஒரு சிறப்பு சட்டமன்றத்தினை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றியது கண்டிக்கதக்கது. சிறப்பு சட்டமன்ற கூட்டம் காங்கிரஸ் கட்சியின் செயல்கூட்டம் போன்று நடைபெறுகிறது.
நிறைவேற்றம்
இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய ஆளும் காங்கிரஸ் அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு புகார் கொடுக்கப்படும். மத கலவரத்தை தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றார். மேலும் கிரண்பேடி கடிதம் தொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் முதலமைச்சருக்கு ரகசியமாக அனுப்பும் கடிதத்தினை முன்னதாக வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் கிரண்பேடி வெளியிடுவது விதிமீறிய செயல்.
அதிமுக என்ஆர் காங். வெளிநடப்பு
ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவர் கிரண்பேடி. ஆளுநர் பதவிக்கு கிரண்பேடி இழுக்கு ஏற்படுத்துகின்றார் என பேரவையில் குற்றம்சாட்டினார். இன்று நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை, பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.