புதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவரும், தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏவுமான டாக்டர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 70.
இவர் 1985-90 ல் உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சட்டசபை உறுப்பினராகவும், 2001-ம் ஆண்டு முதல் 2011 வரை முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டசபை உறுப்பினராக இருந்தார். 2012-2014 வரை திமுக அமைப்பாளராக இருந்த இவர் 2018-ம் ஆண்டு முதல் மக்கள் நீதி மையத்தின் மாநில தரைவராக இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஏ. சண்முகத்தின் மகன்தான் சுப்பிரமணியன்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த இவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. தற்போது சராசரியாக நான் ஒன்றுக்கு 8 முதல் 12 பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. நேற்று முன் தினம் மட்டும் 13 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்றைய நிலவரப்படி 15,157 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9,968 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏழுமலை, என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.