பிளாஸ்டிக் ஆடை அணிந்து.. ஒரு நூதன பேரணி.. புதுவையை வலம் வந்த .. "பிளாஸ்டிக் எமன்"!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அறிவித்தபடி மாசு ஏற்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்ககோரி தனிமனிதன் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வு நடைபயணத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்ளுக்கு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி அரசும் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் 14 வகையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருள் தயாரிப்பு பணி உள்ளிட்ட சில காரணங்களால் பிளாஸ்டிக் தடை ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம் சார்பாக சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு உடனடியாக தடை விதிக்கக்கோரி சுந்தராஜன் என்பவர் தனிமனிதனாக நூதன முறையில் பிளாஸ்டிக் பொருட்களை ஆடையாக அணிந்துகொண்டு, விழிப்புணர்வு நடை பயணத்தை மேற்கொண்டார்.
தேங்காய்திட்டு பகுதியிலிருந்து துவங்கிய பேரணி, கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகே நடைபயணத்தை முடித்தார்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா