கொரோனா வைரஸ்.. புதுவை திரும்பிய மருத்துவ மாணவர்கள்.. 28 நாட்கள் கண்காணிப்பில்!
புதுச்சேரி: சீனாவில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு வந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் உட்பட மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் மூன்று பேரையும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
சீன நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 132 பலியாகியுள்ளனர். 5,974 பேருக்கு நோய் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொரோனா நோய் பீதியின் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றார்கள்.
புதுச்சேரியில் இருந்து சீனாவில் தங்கி படித்த 2 மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழில் சம்பந்தமாக சீனா சென்ற இளைஞர் உட்பட மூன்று பேர் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் மூவரையும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. இருப்பினும் அவர்கள் வீட்டிலேயே 28 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கபடுவர். கொரோனா வைரஸ் குறித்து புதுச்சேரி மக்கள் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை.
இதுபோன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் அதை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு தொற்றுநோய் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனி பிரிவை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.
ஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு!