4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை.. அமைச்சர் மல்லாடி கிருணாராவ் பொளேர்
புதுச்சேரி: 4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி செய்யவில்லை என்றும், அவருடைய சேவை பூஜ்யம் என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. 4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை. மக்களுக்கு இலவச அரிசி தரும் திட்டத்தைகூட முடக்கிவிட்டார். நான்கு ஆண்டுகளாக பொய்யையே கூறி வந்துள்ளார். முதல்வர், அமைச்சர்கள் இல்லாமல் தான் மட்டுமே மத்திய அமைச்சர்கள் யாரையேனும் சந்தித்து ஒரு பைசா பணம் அல்லது ஒரு திட்டம் கொண்டுவந்தேன் என்று கூற முடியுமா? புதுச்சேரி மக்களுக்கு தொடர்ந்து தொல்லைதான் கொடுத்து கொண்டுள்ளார்.
பிற ஆளுநர்கள் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் உள்ள நண்மைகளை பார்த்து அனுமதி தருவார்கள். ஆனால் கிரண்பேடியிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. அனைத்து திட்டங்களையும் தடுத்ததையும், கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியதையும் தான் சாதனையாக கூற முடியும். மற்றபடி அவருடைய சேவையில் பூஜ்யம் தான்.
புதுச்சேரியில் மதுபான கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்: நாரயணசாமி
மத்திய அரசிடம் நிதி வாங்கி தரவில்லை
மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பைசா கூட வாங்கி வரவில்லை. புதுச்சேரி மக்களின் பணத்தில் செலவு மட்டுமே செய்துள்ளார். தற்போது கொரோனா பாதிப்பினால் குடியரசுத் தலைவர் ரூ.45 கோடி செலவு குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுபோல் ஆளுநர்களும் குறைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதன்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஏதேனும் ஒரு ரூபாய் செலவையாவது குறைத்திருப்பாரா? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கர்வம் இல்லை. ஏனென்றால் முதல்வர் பதவிக்கு முன்பே அதைவிட பெரிய பதவிகளை வகித்துவிட்டார். அதுபோல் அமைச்சர்களும் யாரும் முதல் முறை பதவிக்கு வரவில்லை. ஆனால் கிரண்பேடி தற்போதுதான் முதல் முறையாக ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார்.
மது கடை திறக்க அனுமதி இல்லை
மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை எடுத்து அனுப்பிய முடிவுக்கு அனுமதி தர மறுக்கின்றார். அதற்கு புதுச்சேரியில் எதுவும் நடக்ககூடாது, புதுச்சேரிக்கு வருமானம் வர கூடாது என்ற எண்ணம்தான். கொரோனா பாதிப்பு காலத்துக்கு மாநில அரசு ரூ.2 ஆயிரமும், மத்திய அரசு அரிசியும், பருப்பும்தான் வழங்கியது. இது போதாது, மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கு வருமானம் வேண்டும்.
மதுகடை திறக்காவிட்டால் நட்டம்
மதுக்கடை திறக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடிவரை நட்டம் ஏற்படும். வருமானம் வந்தால்தான் ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய முடியும். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு சமமாக மதுபான வரி விதிக்கும்படி வலியுறுத்துகின்றார். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக மதுபான வரி வசூலிக்கவில்லை.
சிகிச்சை வெற்றி ஆனால்..
ஆந்திராவில் 75 சதவீதமும், தெலுங்கானாவில் 30 சதவீதமும் மதுபான வரி விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு மாதம் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. மின்துறையில் மின்சாரம் வாங்குவதற்காக ரூ.150 கோடி தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு வந்து 59 நாட்கள் ஆகின்றது. இதுவரை ஒருவர் கூட சாகவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகியவைகளை மேற்கொண்டால் போதும். ஆனால் ஆளுநரை கட்டுப்படுத்த தெரியவில்லை. ஆளுநரின் செயல்கள் அனைத்தும் சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி சாவு என்ற வகையில்தான் இருக்கிறது. ஆளுநர் வாயால் கூறுவதை எல்லாம் நிறைவேற்றிவரும் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். பயந்து சில அதிகாரிகள் கிரண்பேடிக்கு ஆதரவு தருகின்றனர் என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.