'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி: அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையிலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆளும் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து, தனது தொகுதியான வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 'வருங்கால முதல்வர்' நமச்சிவாயம் என்று கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறந்த முறையில் இரவு பகலாக செயல்பட்டதன் காரணமாக பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.
பல்வேறு இடர்பாடுகளை தலைவர்கள் எனக்கு கொடுத்தது தொடர்பாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவ்வப்போது அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கும் வகையில் 40 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து சோனியா காந்தி ஒப்புதல் அளித்தும் கூட அதை செயல்படுத்த முடியாது நிலை உள்ளது.
புதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்!
அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில், வெகு விரைவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.