கட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.
ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறந்த முறையில் இரவு பகலாக செயல்பட்டதன் காரணமாக பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.
'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்
தலைவர்கள் கொடுத்த டார்ச்சர்
பல்வேறு இடர்பாடுகளை தலைவர்கள் எனக்கு கொடுத்தது தொடர்பாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவ்வப்போது அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கும் வகையில் 40 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து சோனியா காந்தி ஒப்புதல் அளித்தும் கூட அதை செயல்படுத்த முடியாது நிலை உள்ளது.
அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையாலும், நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில், வெகு விரைவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்காலிக நீக்கம்
இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
கட்சிக்கு துரோகம்
இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சித் தலைவராக இருந்த போது அவருக்கு முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராக சுதந்திரமாக செயல்பட்டார். ஆனால் கட்சிக்கு மிகப் பெரிய துரோகம் செய்து விட்டார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவருடன் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்" என்றும் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் ராஜினாமா
இந்நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அமைச்சர் நமச்சிவாயம் தான் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதேபோல், நமச்சிவாயத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார்.