புதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்!
புதுச்சேரி: பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனது அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் எந்தநேரத்திலும் ராஜினாமா செய்ய இருப்பதாக ஆதரவாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனது தொகுதியான வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் துவங்கும் முன்னதாகவே செய்தியாளர்களை வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தனது அடுத்தக்கட்ட நிலைக்குறித்து ஆதாரவாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். அதில், காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தனக்கு அளிக்கப்படவில்லை.
தனது தொகுதிக்கும், ஆதாரவாளர்களுக்கும் எவ்வித பணிகளையும் செய்ய முடியவில்லை. மேலும் அரசியலில் இருந்து விலகலாமா, மாற்று அரசியல் செய்யலாமா என ஆதரவாளர்களிடம் கேட்க, அவர்கள் 'வேண்டாம் என்றும் மாற்று அரசியலில் ஈடுபடலாம்' என கோஷமிட்டனர்.
விரைவில் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்த அமைச்சர், 'என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த உங்களிடத்தில் இத்தகவலை தெரிவித்தேன். அரசியில் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாமா?' என ஆதரவாளர்களிடம் கேட்க அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து அரைமணி நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது. வெளியே வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள், ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை ஏன் என கேட்டதற்கு ''நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்''என்றார்.
பாஜகவுக்கு நீங்கள் செல்வதாக தகவல் வருகிறதே, அது உண்மையா? என்ற கேள்விக்கு ''இதுவரை அதுபோன்று இல்லை''என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் உறவினர் என்பது கூடுதல் தகவல்.