யார் இந்த ஜான் குமார்.. நாராயணசாமிக்காக விட்டு கொடுத்து.. ஐடி ரெய்டுகளில் சிக்கி.. இப்போது..?!
புதுச்சேரி ஜான்குமார் ராஜினாமா செய்துள்ளார்
புதுச்சேரி: யார் இந்த ஜான்குமார்? புதுச்சேரியின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்தான் இந்த ஜான் குமார். இப்போது தனது எம்எல் ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று இதுதான் ஹாட் டாப்பிக்காக அரசியல் களத்தில் மாறி உள்ளது.. ஆனால் இவர் பிரபலமானதே ஒரு சட்டசபை தேர்தலை வைத்துத்தான்...
கடந்த பொதுத் தேர்தலின்போது நெல்லித்தோப்பு தொகுதியிலிரு்து காங்கிரஸ் சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் குமார். ஆனால் எதிர்பாராத விதமாக எம்எல்ஏவாக இல்லாத நாராயணசாமி முதல்வராகி விட்டார்.
முதல்வர்
முதல்வரான நாராயணசாமி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டி வந்ததால் அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்து ஒரே நாளில் ஃபேமஸ் ஆனார்.. இதனால் தியாகி பட்டமும் இவரை தானாகவே தேடி வந்தது... இவரது தியாகத்தை நாராயணசாமியும் மறக்கவில்லை... முடிந்தவரை இவருக்கு உயர்வு கொடுத்தும் வந்தார்.
ராஜினாமா
இந்த நிலையில்தான் காமராஜர் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது... மறக்காமல் ஜான் குமாருக்கு அந்த தொகுதியைக் கொடுத்து அபாரமாக வெற்றி பெறவும் வைத்தார் நாராயணசாமி... ஆனால் பாருங்க, இப்போது அந்தப் பதவியைத்தான் ராஜினாமா செய்து விட்டார் ஜான் குமார். இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக கூறப்படுவது ஜான் குமாரை சுற்றி வட்டமடிக்கும் வருமான வரித்துறை வழக்குகள்தான் என்று சொல்கிறார்கள்.
சிக்கல்
நாராயணசாமிக்கு தொகுதியை விட்டு கொடுத்தது முதலே இவருக்கு சிக்கல் ஆரம்பித்தது... அதிலும் காமராஜர் நகர் தொகுதியில் இவர் வெற்றி பெற்ற பிறகு ஐடி இவரை குறி வைத்தது. ரெய்டுக்கும் உள்ளானார்... இந்த நிலையில்தான் சமீபத்தில் புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுராணாவை சந்தித்து அவர் பேசியதாக ஒரு தகவல் வெளியானது. இதை வெளியிட்டவர் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம்தான்.
சுராணா
ஜான் குமாரும், சுராணாவும் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியிருந்தன. இந்த நிலையில்தான் தற்போது தனது பதவியை உதறியுள்ளார் ஜான் குமார். அவருக்கு என்ன மாதிரியான நெருக்கடி ஏற்பட்டது என்பதுதான் புதுச்சேரியில் இப்போது ஹைலைட்டாக பேசப்படுகிறது... ஜான் குமாருக்கு முன்பே 3 முக்கிய தலைகள் பதவியிலிருந்து விலகி விட்டன என்பது நினைவிருக்கலாம். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.
வழக்கு
இதை விட முக்கியமாக ஊரடங்கு உத்தரவை மீறி அதிக அளவில் கூட்டம் கூட்டியதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவின் பேரில் ஜான் குமார் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதை கிரண் பேடியும் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்... அப்போது அது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம். ஒரே ஆட்சியில் 2 முறை எம்எல்ஏவாக பதவியேற்ற பெருமைக்குரியவர் இந்த ஜான் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.