புதுச்சேரி.. சபாநாயகரானார் சிவகொழுந்து.. பதவி விலகிய வைத்திலிங்கம்.. நாராணயசாமி சொன்னதுதான் ஹைலைட்டே
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்தார். அதேநேரம் சிவகொழுந்து சபாநாயகராக பதவியேற்றுள்ளார். கருணாநிதி பிறந்த நாளில் சிவகொழுந்து பதவியேற்று இருப்பதாக முதல்வர் நாராயணசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
புதுச்சேரி மாநில சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டப்பட்டு, சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் பரவுது.. வாழை பழத்தில் ஊசியை ஏற்றி.. கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏஆர் ரகுமான்!
சிவகொழுந்து தாக்கல்
ஆளும் கட்சி சார்பில் துணை சபாநாயகராக இருந்த லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.சிவகொழுந்து சபாநாயகர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எதிர்கட்சி சார்பில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
போட்டியின்றி தேர்வு
இந்நிலையில் இன்று காலை 9.40 மணிக்கு பேரவை கூடியதும் தற்காலிக சபாநாயகராக அனந்தராமன் பேரவை நிகழ்வுகளை தொடங்கி வைத்து, வி.பி.சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் - திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.சிவகொழுந்தை அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
கருணாநிதி பிறந்த நாளில்
பின்னர் சிவகொழுந்து சபாநாயகராக பொறுப்பேற்றுகொண்டார். இதனையடுத்து சபாநாயகராக பதவியேற்றுள்ள வி.பி.சிவகொழுந்துவை வாழ்த்தி பேரவையில் முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "பேரவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சட்டப்பேரவைக்கு கண்ணியம் சேர்த்த கருணாநிதி பிறந்த நாளான இன்று, புதிய சபாநாயகராக சிவகொழுந்து பதவி ஏற்றுள்ளது சால சிறந்தது.
எதிர்க்கட்சிகள் புகார்
ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற எந்தவித பாரபட்சமுமின்றி சிவகொழுந்து நடுநிலையாக செயல்படுவார் என நம்புவதாக தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் தேர்தலுக்கான கால அவகாசம் கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன். விதிகளுக்கு உட்பட்டுதான் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ம் தேதி நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் இதேபோன்ற முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது" என்பதை குறிப்பிட்டார் முதல்வர் நாராயணசாமி.
சபாநாயகர் பதவி ஏற்பு
இதனிடையே சபாநாயகர் தேர்தல் போதிய கால அவகாசம் கொடுக்காமல் நடத்தப்பட்டதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக இன்றை சட்டமன்ற கூட்டத்தையும், சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்வையும் புறக்கணித்தனர்
ராஜினாமா கடிதம் அளித்தார்
இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த எம்.பி. வைத்திலிங்கம் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட சிவக்கொழுந்துவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு தனது காமராஜர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கொடுத்தார்.
ஆறுமாதத்தில் தேர்தல்
இதனையடுத்து 30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றதையடுத்து திமுக பலம் மூன்றாக உயர்ந்துள்ளது இதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தேவையான பலத்துடன் காங்கிரஸ் அரசு உள்ளது. மேலும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ள காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.