புதுச்சேரியில் புதுப்பொலிவு பெறும் 184 ஆண்டுகள் பழைமையான பிரெஞ்சு கால கலங்கரை விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கலங்கரை விளக்கம் 3 கோடியே 32 லட்சத்தில் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உள்ளதாக மத்திய கலால் ஆணையர் ரவிந்தரநாத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த கலங்கரை விளக்கம் பிரெஞ்சு ஆட்சியில் கவர்னர் செயின்ட் சைமன் காலத்தில் கட்டப்பட்டது. இது 9 மீட்டர் அடித்தளமும், 29 மீட்டர் உயரமும் கொண்டது. புயலின் வேகம் இக்கட்டிடத்தை பாதிக்காமல் இருக்க 2 அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டது.
1836 ஆம் ஆண்டு ஜூலை L;1 ஆம் தேதி இந்த கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது உலகம் முழுவதும் இருந்த 250 கலங்கரை விளக்கத்தில் இதுவும் ஒன்றாக திகழ்ந்தது. இந்த கலங்கரை விளக்கம் செயல்பட தொடங்கிய போது, 6 எண்ணெய் விளக்குகளும், அவற்றை பிரதிபலிக்க 2 வெள்ளி பிரதிபலிப்பான்களும் பயன்படுத்தபட்டன.
மேலும் இந்த கலங்கரை விளக்கம் கடந்த 1913 ல் மின் விளக்காகவும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இது மத்திய கலால் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே கலங்கரை விளக்கத்தை புதுப்பித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில் கலங்கரை விளக்கத்தை புதுப்பிப்பது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய கலால் ஆணையர் ரவிந்திரநாத், புதுச்சேரியில் 184 ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணி இம்மாதத்தில் தொடங்கி ஓராண்டில் நிறைவடையும். மொத்தம் ரூபாய் 3.32 கோடி மதிப்பீட்டில் பணிகளை செய்கிறோம். கலங்கரை விளக்கத்தின் மேல்தளம் தொடங்கி மரப்படிக்கட்டுகள், கதவுகள் உள்ளிட்டவை முழுமையாக சரிசெய்யப்படும். அதன்பிறகு மக்கள் அனுமதிக்கப்படுவா். நுழைவுக்கட்டணம் தொடர்பாக ஏதும் முடிவு எடுக்கவில்லை. இது மக்களுக்கான இடம் என்றும், கலங்கரை விளக்கத்திலிருந்து புதுச்சேரி அழகையும், கடலையும் ரசிக்கும் வகையில் தயார்செய்யப்படும் என்று தெரிவித்தார்.