2,000 ரூபாய் பணத்தால் காற்றில் பறந்த சமூக இடைவெளி.. நடவடிக்கை எடுக்குமா புதுவை அரசு!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியை, பெறுவதற்காக அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், சமூக இடைவெளி கேள்விகுறியாகியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, கடைகளுக்கு வரும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டு, அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
அரசு உதவித் தொகை
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதியவர்கள், விதைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் உதவித்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. பயனாளிகள் தாங்கள் வாழ்நாளில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்கள் வங்கிகளுக்கு நேரிடையாக சென்று அங்குள்ள மின்னணு இயந்திரத்தில் கைரேகையிட்டபின்பு தான் உதவித்தொகையை பெறமுடியும்.
வங்கிக் கணக்கில்
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான அரசின் உதவித்தொகைகள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3.45 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரூபாய் 2,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2 ஆம் தேதி முதல் அவரவர் வங்கி கணக்கில் கொரோனா அதற்கான பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
சமூக இடைவெளி இல்லை
இதனால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கிகிளைகளிலும் ஏராளமான முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முக கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வரிசையில் நிற்கின்றனர். இதனால் புதுச்சேரியில் சமூக இடைவெளி கேள்குறியாகியுள்ளது.
நடவடிக்கை தேவை
ஆகவே புதுச்சேரியில் வங்கிகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வீட்டுகே சென்று உதவித்தொகையினை வழங்கப்பட வேண்டும். மேலும் நடமாடும் வங்கிகள் மூலமும் பணத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.