சரக்கு வேணுமா சார்.. எங்க கூட வாங்க.. நம்பிப் போன தொழிலதிபர்.. ரூ. 1.5 லட்சம் நகை காலி!
புதுச்சேரி: மதுக் கடைக்கு வந்த தொழிலதிபரை சரக்கு ஆசை காட்டி நைஸாக கூட்டிச் சென்று அவரிடமிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மிக மிக நூதனமான முறையில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அதை விட கொடுமை, இந்த திருடனை நம்பி தொழிலதிபர் சரக்குக்கு ஆசைப்பட்டு சென்று மாட்டிக் கொண்டதுதான்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் முதலில் பிடித்தனர். ஆனால் ஒருவருக்கு அதில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை விட்டு விட்டனர்.
அன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்!
பூபதி ராஜா
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதிராஜா. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மது குடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு காரில் சென்றார்.
சரக்கு இல்லையே
ஆனால் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காரணமாக மதுக்கடை மூடப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த பூபதிராஜா அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
செல்வக்குமார் நாகமுத்து
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து ஆகிய இரண்டு இளைஞர்கள், பூபதிராஜாவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். செல்வகுமார் தன்னிடம் உயர்ரக மதுபாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
ஆசை வந்தது
உடனே பூபதிராஜா மது குடிப்பதற்காக அவர்கள் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் மதுவை பங்கிட்டு குடித்தனர். பூபதிராஜாவுக்கு போதை தலைக்கேறியது. இந்த நிலையில் செல்வகுமார், நாகமுத்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஆட்டையைப் போட்டுட்டானுகளே
போதை தெளிந்து எழுந்த பூபதிராஜா, தான் அணிந்திருந்த 2 பவுன் மோதிரம், 2 ½ பவுன் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் தன்னுடன் சேர்ந்து மது குடித்தவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் பூபதிராஜா புகார் செய்தார்.
சிக்கினார் செல்வக்குமார்
புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் மற்றும் நாகமுத்துவை பிடித்து விசாரித்தனர். இதில் நகைகள், செல்போன் திருடியதை செல்வகுமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 ½ பவுன் நகைகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகமுத்து விடுவிப்பு
இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். விசாரணையில் இந்த திருட்டில் செல்வகுமாரின் நண்பரான நாகமுத்துக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.