கோவில் விழாக்கள் மட்டுமே.. ஊர் ஊராக சென்று திருடும் பாண்டீஸ்வரி.. வசமாக சிக்கினார்
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவில்களில் விசேஷ நாட்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 17 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர்ச்சியாக பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த பிரதோஷம் அன்று காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவில், லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சித்தானாந்தர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்தி பக்தர்களிடம் மர்ம கும்பல், தங்க சங்கிலியை பறித்து சென்றது. இது குறித்து பெரியகடை மற்றும் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகை திருட்டில் ஈடுப்பட்டது, திருச்சியைச் சேர்ந்த மதிரதி (36) மற்றும் பாண்டீஸ்வரி (22) ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதனிடையே நாளை பிரதோஷம் என்பதால், கோவிலில் திருடுவதற்காக மதிரதி மற்றும் பாண்டீஸ்வரி ஆகிய இருவரும் புதுச்சேரிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் பிடிப்பதற்கு போலீசார் விரைந்து சென்றபோது, போலீசாரை கண்ட மதிரதி தப்பி விட்டார்.
பாண்டீஸ்வரி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். இதனையடுத்து பாண்டீஸ்வரியைகைது செய்த போலீசார் கோவில்களில் பக்தர்களிடம் திருடிய 17 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மதிரதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பாண்டீஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் கோவில்களில் விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை திருடி வந்ததாகவும், திருவிழா நடைபெறுவதற்கு முந்தைய நாள் கோவில்களுக்கு குடும்ப பெண்கள் போன்று உடையணிந்து சென்று, கோவில்களில் உள்ள இடங்களை பார்த்துவிட்டு, மறுநாள் திருட்டை கட்சிதமாக முடித்துவிட்டு, சொந்த ஊரான திருச்சிக்கு தப்பித்து செல்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.