விடுதியில் தங்கிய ஜோடி.. ரோந்து சென்ற போலீசார்.. காதலன் கண்முன் காதலி பலாத்காரம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் காதலன் கண் முன்னே காதலியை இரவு ரோந்து சென்ற போலீசார் இரண்டு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாடு முழுவதுமிலிருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் காதல் ஜோடிகள் புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்கு அதிகளவில் வருகின்றனர். இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் இங்கேயே அறை எடுத்து பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அன்றிரவு அம்பலத்தடையார் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
ரெய்டு வந்த போலீஸ்
அப்போது அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது காதலர்கள் தங்கியிருந்த அறைக்கு நேராக சென்ற போலீசார், நீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே சொல்லிவிடுவோம், வழக்குபதிவு செய்துவிடுவோம் எனக்கூறி காதல் ஜோடிகளை மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன ஒரு காதல் ஜோடி தங்களிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
பணம் பறிப்பு - பலாத்காரம்
மற்றொரு காதல் ஜோடியிடம் பணம் இல்லாததால் காதலன் கண் முன்னே காதலியை இரண்டு போலீசாரும் சேர்ந்து கொடூரமான முறையில் கற்பழித்துள்ளனர். இதனால் அந்த பெண் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். நடந்ததை வெளியே கூறினால் தங்களுக்குத்தான் அவமானம் என கருதிய காதலர்கள் இந்த விஷயத்தை வெளியே கூறாமல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2 பேர் சஸ்பெண்ட்
இச்சம்பவம் குறித்து காவல்துறை தலைமையகத்திற்கு புகார் சென்றதையடுத்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உயர்மட்ட போலீஸ் குழு இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்ததையடுத்து இளம்பெண்ணை கற்பழித்த காவலர் சதீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
அதிர்ச்சியில் மக்கள்
மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் காதலன் கண் முன்னே காதலியை பணியில் இருந்த போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே இதுபோன்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.