தம்பி நான் கே.எஸ்.அழகிரி.. அப்படி யாரையும் தெரியாது.. அதிர வைத்த புதுச்சேரி போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி எல்லையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைவதை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர, மற்ற எந்த வாகனங்களும் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடை நுழைவு வாயிலில், இருபுரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, காங்கிரஸ் கட்சி கொடியுடன் ஒரு கார் கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அந்த காரை தடுத்தி நிறுத்தி, விசாரித்தனர்.
அப்போது, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கே.எஸ்.அழகிரி, நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என கூறியுள்ளார். ஆனால் போலீசாருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்று தெரியவில்லை. இதனால் கே.எஸ்.அழகிரியை கீழே இறக்கி, போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, தன்னை காரில் செல்வதற்கு போலீசார் மறுப்பதாக நடந்த சம்பவத்தை விளக்கி கூறியுள்ளார்.
உடனே அமைச்சர் கந்தசாமி, கிருமாம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர், தன்வந்திரியிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். உடனே, உதவி ஆய்வாளர் தன்வந்திரி, முள்ளோடையில் பணியில் இருந்த போலீஸாரை தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து கே.எஸ்.அழகிரி காரை செல்ல போலீசார் அனுமதித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஆகும். இதனால் அவர் கடலூரில் இருந்து அவ்வப்போது சென்னை சென்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.