'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு
புதுச்சேரி: மிரட்டல் வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளியான தாதா எழிலரசியை ஒப்படைக்க வேண்டும் என்று புதுச்சேரி பாஜகவுடன் அம்மாநில போலீசார் மல்லுக்கட்டி வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் ரவுடிகள், தாதாக்கள் பலரும் இப்போது பாஜகவின் பிரமுகர்களாக உருமாறி வருகின்றனர். இந்த வகையில்தான் காரைக்கால் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா எழிலரசி புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
தாதா எழிலரசி அத்தியாயம்
காரைக்கால் சாராய வியாபாரியான ராமுவின் 2-வது மனைவி எழிலரசி. முதல் மனைவி வினோதாவால் ராமு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் இருந்து எழிலரசி எனும் தாதாவின் அத்தியாயம் தொடங்கியது.
குலைநடுங்க வைக்கும் சம்பவங்கள்
அடுத்தடுத்து படுகொலைகள்... கைதுகள்... கணவரை கொன்ற வினோதாவை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தது.. புதுச்சேரி மாஜி சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.. என புதுவை யூனியன் பிரதேசத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறார் எழிலரசி.
தேடப்படுகிற குற்றவாளி
சிறைவாசம்.. குண்டர் தடுப்பு சட்டம்.. முன்னெச்சரிக்கை கைது... என எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் எழிலரசி.. இந்த நிலையில் கணவர் ராமுவின் முதல் மனைவி குடும்பத்தினரை மிரட்டி மதுபான கடையை பறித்துக் கொண்டது தொடர்பான வழக்கு ஒன்றில் எழிலரசி தேடப்படும் குற்றவாளி என கூறியது போலீஸ்.
பாஜகவில் எழிலரசி
இந்த பின்னணியில் திடீரென பாஜகவில் இணைந்து அரசியல் பிரமுகராகிவிட்டார் எழிலரசி. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள புதுச்சேரி போலீஸ், அவரை தேடிவரும் நிலையில் உங்க கட்சியில் சேர்ந்துட்டாங்க.. எங்களிடம் அவரை ஒப்படைச்சிடுங்க என கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.