யாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை!
புதுவை: புதுச்சேரியில் கோயில் வாசலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பாட்டியின் பையில் வங்கிக் கணக்கு புத்தகம், நகை, பணம் இருந்ததை கண்டு அவரை அப்புறப்படுத்த வந்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுவை காந்தி வீதியில் உள்ளது ஈஸ்வரன் கோயில். இங்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு வருகின்றனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை யாசகம் கேட்டு தொல்லை செய்வதாகவும் கொடுக்காவிட்டாலும் அவர்களில் சிலர் சாபமிடுவதும் திட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தினர். 85 வயதான மூதாட்டி ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
காவல்துறை
அப்போது மூதாட்டியின் பையில் ரூ 15 ஆயிரம் பணம், தங்க நகைகள் ஆகியன சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
1 லட்சம் பணம்
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் மூதாட்டியின் பையை சோதனை செய்தனர். அதில் வங்கி பாஸ்புக் இருந்தது. அதை சோதனை செய்த போது பாட்டியின் பெயரில் ரூ 1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
பாட்டி பெயர் பர்வதம்
மேலும் அந்த பையில் தங்க கம்மல், ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன் கார்டு ஆகியன இருந்தன. அந்த பாட்டியின் பெயர் பர்வதம் என்பதும் அவரது கணவர் பெயர் ரமணன் என்பதும் பாட்டி உருளையன்பேட்டை பகுதி வாழைக்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கோரிக்கை
இதையடுத்து பணம், நகையை பாதுகாப்பு கருதி எடுத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.