நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு - புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றதை அடுத்து அதற்கான அறிவிப்பு புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக உள்ளது
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கடிதம் அளித்தனர். அதனை ஏற்று நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 22ஆம் தேதி கூடியது. அவையில் பெரும்பான்மை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பேரவையில் உரையாற்றினார். அப்போது சட்டசபைத் தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளது என தெரிவித்தார். உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் நாராயணசாமி. இதனை அடுத்து அவரது அமைச்சரவை சகாக்களும் வெளியேறினர்.
இதனையடுத்து நாராயணசாமியின் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அவரது அமைச்சரவை சகாக்களுடன் துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று அவர்களது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்தனர். இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார் நாராயணசாமி. இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து இது தொடர்பாக புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக உள்ளது. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது இது 6வது முறையாகும்.