புதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பதை அடுத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அடுத்து 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. ஆளுநர் கிரண் பேடிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், ''ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், ஆளுநருடன் எந்தவித அலுவல் பணியிலும் தொடர்பில் இல்லாதவர். இருந்தபோதும், ஆளுநரின் தனிப்பட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அடிக்கடி களப்பணிக்கு செல்வதால், அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்து கொள்கிறார். ஆளுநர் கிரண்பேடியும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.