பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுவையில் ஒரு பூத்தில் மறு வாக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதிகுட்பட்ட காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில், மாதிரி வாக்குப்பதிவின்போது விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எடுக்காததால், அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
இதனிடையே தேர்தலின்போது காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில், விவிபாட் எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான ஒப்புகை சீட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுக்காமல் வாக்குப்பதிவை நடத்தியதால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட தேர்தல் ஆணையம் அந்த வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவை நடத்தி வருகிறது.
இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் 473 ஆண் வாக்காளர்களும், 479 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 952 வாக்காளர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவின் போது வாக்களர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்பட உள்ளது.
மேலும் வாக்குப்பதிவு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடியில் பந்தல், குடிநீர், கழிப்பிடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தேர்தல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன.
என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!